Friday, September 28, 2012

இஸ்லாமியர்களுக்கு எதிராக திரைப்படம் தயாரித்தவர் கைது


இஸ்லாமியர்களுக்கு எதிராக திரைப்படம் தயாரித்தவர் கைது



அமெரிக்காவில் இருந்து வெளியிடப்பட்ட திரைப்படம் நபிகள் நாயகத்தை அவமதிப்பதாக உள்ளது என்று உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
 
மேலும் இந்த சர்ச்சைக்குரிய திரைப்படத்தை வெளியிட்ட அமெரிக்காவைக் கண்டித்து இந்தியா, லிபியா, பாகிஸ்தான், எகிப்து போன்ற பல நாடுகளில் பெரும் போராட்டங்கள் வெடித்தன. அமெரிக்க தூதரகங்கள் தாக்கப்பட்டன.
 
இதற்கிடையே இந்த திரைப்படத்தை தயாரித்தவரை கொல்பவருக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலரை நான் பரிசாகத் தருவேன் என்று பாகிஸ்தான் மந்திரிகுலாம்அகமது பிலோர் அறிவித்தார். அமெரிக்காவுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்ததால், சர்ச்சைக்குரிய படத்தை தயாரித்தவரை போலீசார் தேடி வந்தனர்.
 
இந்நிலையில் அந்த படத்தை தயாரித்த நகோலா(55) என்பவரை கலிபோர்னியா போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஜாமீனும் வழங்கப்படவில்லை.
 
இதற்கு முன் நகோலா தனது பெயரை பலமுறை மாற்றி, பல்வேறு பெயர்களில் கிரெடிட் கார்டுகள் பெற்று முறைகேடு செய்துள்ளார். போலியான வங்கிக் கணக்கு தொடங்கி பல்லாயிரக்கணக்கான டாலர் கடன் பெற்றுள்ளார். இதுதொடர்பாக கடந்த 2009ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நகோலா, 2011ல் விடுதலை ஆனது குறிப்பிடத்தக்கது

ப்ரேசில் நாட்டு Google தலைவருக்கு பிடி வாரண்ட், ஈரானில் Gmail க்கு தடை!, கொட்டு வாங்க ஆரம்பித்த கூகுள்!

ப்ரேசில் நாட்டு Google தலைவருக்கு பிடி வாரண்ட், ஈரானில் Gmail க்கு தடை!, கொட்டு வாங்க ஆரம்பித்த கூகுள்! 

பிடி வாரண்ட பிறப்பிக்க பட்ட Google உயர் அதிகாரி Fabio Jose Silva Coelho
ஈரான் நாட்டு தொலை தொடர்பு துறை அமைச்சர் Reza Taqipour
நபிகள் நாயகத்தை கொச்சைப்படுத்தும் வீடியோவை நீக்காமல் வைத்துள்ள Yotube க்கு ப்ரேசில் நாட்டு நீதிமன்றம் நேற்று ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது.  10 நாட்களுக்குள் நபிகள் நாயகத்தை கொச்சைப்படுத்தும் வீடியோவை  Youtube ல் இருந்து நீக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
10 நாட்களுக்கு பிறகும் அந்த வீடியோ Youtube ல் இருந்தால் அந்த வீடியோ இருக்கும்  ஒவ்வொரு நாளைக்கும் Google நிறுவனம் 5 ஆயிரம் அமெரிக்க டாலர் அபராதம் வழங்க வேண்டும் எனவும் கோர்ட் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
National Islamic Union என்ற இஸ்லாமிய அமைப்பு ஒன்று தொடர்ந்த வழக்கில் ப்ரேசில் நாட்டு நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
இதே போன்று தேர்தல் தொடர்பான மற்றுமொரு சர்ச்சைக்குரிய வீடியோவைநீக்குமாறு ப்ரேசில் நாட்டு தேர்தல் நீதிமன்றம் சமீபத்தில் Google க்கு உத்தரவிட்டது, ஆனால் வழக்கம் போல இது பேச்சு சுதந்திரம் எனக் கூறி Youtube நீக்க மறுத்து விட்டது. ஒபாமா கி்ட்டதான் இந்த மாறி பேச்சுல்லாம் செல்லும் , ஆனால் ப்ரேசில் நாட்டு  நீதிமன்றம் ஆத்திரமடைந்து சமீபத்தில் ப்ரேசில் நாட்டு Google நிறுவனத்தின் தலைவருக்கு (Head of Google operation in Brazil) பிடி வாரண்ட் பிறப்பித்தது உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து புதன் கிழமை (26-9-2012) ப்ரேசில் நாட்டு Google நிறுவனத்தின் தலைவர் போலிசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் ”நான் வழக்கிற்கு முழுவதுமாக ஒத்துழைக்கின்றேன் நீதிமன்றத்தில் ஆஜராகின்றேன் என அவர் எழுத்துபூர்வமாக அவர் எழுதி கொடுத்ததை தொடர்ந்து விடுவிக்கப்பட்டார்.
இதே போன்று ஈரான் நாட்டு அரசு  தற்போது Gmail க்கு ஈரான் நாட்டில் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
ஈரான் நாட்டு தொலை தொடர்பு துறை அமைச்சர் , நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து Google நிறுவனத்தில் Gmail சேவை ஈரான் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது மேலும் மறு உத்தரவு வரும் வரை இந்த தடை தொடரும் எனக் தெரிவித்துள்ளார்.

Monday, September 24, 2012

முகமது நபிகளை இழிவுப்படுத்தி சினிமா தயாரித்த அமெரிக்கர் தலைக்கு ரூ.55 லட்சம் பரிசு: பாகிஸ்தான் மந்திரி அறிவிப்பு

முகமதுநபிகளை இழிவுப்படுத்தும் வகையில் அமெரிக்கர் ஒருவர் “இன்னோ சென்ஸ் ஆப் முஸ்லிம்ஸ்” என்ற பெயரில் சினிமா படம் தயாரித்து வெளியிட்டுள்ளார். இதற்கு முஸ்லிம்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். எகிப்து, லிபியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் அரபு நாடுகளில் அமெரிக்க தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. போராட்டங்களும் வலுவடைந்து வருகின்றன. 

பாகிஸ்தானில் போராட்டம் வலுவடைந்து உள்ளது. அதில், இதுவரை 23 பேர் பலியாகி உள்ளனர். பலகோடி மதிப்புள்ள சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. இந்த நிலையில் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் வகையில் சினிமா படம் தயாரித்த அமெரிக்கர் தலைக்கு பாகிஸ்தான் ரெயில்வே மந்திரி குலாம் அகமது பிலோர் ரூ.55 லட்சம் பரிசு தொகை அறிவித்துள்ளார். பெஷாவரில் நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 




முகமது நபிகளை இழிவு படுத்தி சினிமா படம் தயாரித்து வெளியிட்ட அமெரிக்கருக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காக அவரை கொல்பவருக்கு ரூ.55 லட்சம் (1 லட்சம் அமெரிக்க டாலர்) பரிசு தொகை வழங்கப்படும். மதத்தை அவமதிப்பவருக்கு இதுதான் சரியான தண்டனையாகும். பொது மக்கள் தவிர பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ள தலிபான் மற்றும் அல்- கொய்தா தீவிரவாதிகள் அவரை கொலை செய்தால் கூட அவர்களுக்கும் இந்த பரிசு தொகை பொருந்தும் என்று தெரிவித்தார். 

மேலும் அவர் கூறும் போது, ஒருவரை கொலை செய்யும்படி பொது மக்களை தூண்டி விடுவது கிரிமினல் குற்றம் என எனக்கு தெரியும். அதுகுறித்து பாகிஸ்தான் மற்றும் சர்வதேச கோர்ட்டில் என்மீது வழக்கு தொடர வாய்ப்பு உள்ளது. அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. ஏனெனில் இதுபோன்ற விஷயங்களை என்னால் சகித்துக் கொள்ள முடியாது என்றார்.

இதற்கிடையே மந்திரி பிலோரின் இந்த அறிவிப்பு பாகிஸ்தானில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமெரிக்கர் தலைக்கு பரிசு தொகை அறிவித்துள்ள மந்திரி குலாம்அகமது பிலோர் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் கூட்டணி கட்சியான அவாமி தேசிய கட்சியை சேர்ந்தவர். இக்கட்சி கைபர்- பக்துன்கவா மாகாணத்தில் செல்வாக்குடன் திகழ்கிறது.

சீன ராணுவத்தில் முதல் விமானம் தாங்கி கப்பல்


சீனா ராணுவம் உலகில் வலிமையான ராணுவமாக இருந்தாலும், இதுவரை சீனாவிடம் விமானம் தாங்கி கப்பல் இல்லாமல் இருந்தது. அமெரிக்காவுடன் போட்டி போடும் அளவுக்கு ராணுவத்தை வளர்த்து வரும் சீனா இப்போது முதன் முதலாக ராணுவத்தில் விமானந்தாங்கி கப்பலை சேர்த்துள்ளது. 


இந்த கப்பல் ரஷியாவுக்கு சொந்தமானதாகும். ரஷியா 1991-ம் ஆண்டு உடைந்தபோது அந்த கப்பல் உக்ரைனுக்கு சொந்தமானது. 2002-ம் ஆண்டு அந்த கப்பலை சீனா விலைக்கு வாங்கி புதுப்பித்தது. 

சீனாவில் உள்ள டேலியன் கப்பல் கட்டும் துறையில் பல ஆண்டுகளாக புதுப்பிப்பு பணி நடந்து முடிந்து, இப்போது சீன கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. 

கப்பலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி பணிக்காக பயன்படுத்த போவதாக சீனா கூறியுள்ளது. ஆனால் சீனா சமீபகாலமாக பக்கத்து நாடுகளான ஜப்பான், வியட்னாம், பிலிப்பைன்சுடன் கடற் நிலபரப்பு தொடர்பாக மோதல் போக்கை கடைப் பிடித்து வருகிறது. எனவே இந்த கடல் பகுதியில் கண்காணிப்பதற்காகவும் அந்த நாடுகளை அச்சுறுத்தும் வகையிலும் கப்பலை பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கப்பல் 990 அடி நீளம் கொண்டதாகும். 36 விமானங்கள், 16 ஹெலிகாப்டர்களை இதில் நிறுத்தி வைக்கலாம். 3 ஆயிரம் வீரர்கள் கப்பலில் தங்கியிருக்கும் வசதி உள்ளது. ரஷியாவிடம் இந்த கப்பல் இருந்தபோது வர்யாக் என்று பெயரிடப்பட்டு இருந்தது. சீனா இதற்கு ஷிலேங் என்று பெயரிட்டு உள்ளது.

Monday, September 17, 2012

சவூதியில் பஸ்- லொறி மோதி தீப்பிடித்தது: இந்தியர்கள் உள்பட 35 பேர் பலி


துபாயின் ஜூபைல் மாகாணத்தில் இன்று பேருந்தும்,ஆயில் டேங்கர் லாரியும் நேருக்குநேர் மோதி தீப்பிடித்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த சுமார் 35 பேர் இறந்தனர்.


சவூதியில் கேரளாவைச் சேர்ந்தவருக்குச் சொந்தமான நாசல் அல் ஹாஜிரி என்ற நிறுவனம் உள்ளது. இங்கு இந்தியாநேபாளம் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த தொழிலாளர்கள் சென்று வர கம்பெனி சார்பில் பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


இன்று பணி முடிந்து தொழிலாளர்கள் அந்த பேருந்தில் வீடு திரும்பினர். ஜூபைல் நகருக்கு அருகில் சென்றபோது  அந்த பேருந்துஆயில் டேங்கர் லாரியில் மோதியது. மோதிய வேகத்தில் இரு வாகனங்களும் தீப்பிடித்தன. பேருந்தில் இருந்த தொழிலாளர்கள் பலர் தீயில் கருகினர்.


இவர்களில் 10 இந்தியர்கள் உள்பட 35 பேர் உடல் கருகி இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  மேலும்12 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

Monday, May 21, 2012

கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, மற்றும் துபாய் ?வெளிநாட்டு வாழ்வு


இரவின் கடுங்குளிரில் தினமும் சுள்ளி பொறுக்குபவனை பார்த்து வழிபோக்கன் கேட்டானாம் எதற்காக சுள்ளி பொறுக்குகிறாய்? என்ன கேள்வி இது? குளிர் காயத்தான். எப்போது குளிர் காய்வாய்? இவனிடம் பதிலில்லை. 
 
எழுபதுகளிலும் எண்பதுகளிலும்(1970களிலும், 1980களிலும்) வேலை வாய்ப்புத் தேடி இங்கு வளைகுடா நாடுகளுக்கு வந்தவர்கள் இந்த வேலைதான் செய்ய வேண்டும் என்ற இலக்கில்லாமல் ஏதோ கிடைக்கின்ற பணிகளில்

சேர்ந்து.அயல்நாட்டு நாணய மதிப்பில் சம்பளம் வழங்கப்படுவதால் அது நம் நாட்டு மதிப்பில் பெரும் பணமாக இருக்கும்.

அந்த பணத்துக்காக இதுவரை கேவலமாக நினைத்து ஒதுக்கி வந்த கடைநிலை வேலைகளையும் செய்தார்கள்.இவர்களை மாடலாக கொண்டு 90 களுக்கு மேல் வந்த இவர்களின் அடுத்த தலைமுறை அத்தகைய கடைநிலை

வேலைகளில் ஈடுபடுவதை சமூக அந்தஸ்துக்குரிய செயல்களாக பார்த்தனர் இதன் விளைவாக உயர்கல்விக்கான ஆர்வம் குறையத் தொடங்கி. படிக்காத சமூகமாக மாறிப் போயினர்.

90க்கு மேல் வந்தவர்கள் படிப்பின் அவசியத்தை அனுபவப்பூர்வமாக உணர ஆரம்பித்தார்கள் சமூகத்திலும் இந்த காலகட்டத்திற்கு பிறகுதான் நிறைய விஷயங்களில் விழிப்புணர்வு ஏற்ப்பட்டது. இவர்கள் தங்களுடைய பிள்ளைகளை இவர்களின் இளமையை விற்று படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு சில விதிவிலக்கானவர்கள் சரியாக படித்து சரியான வேலைகளில் இருந்தாலும் அவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய சிறுபான்மை என்பதையும் மறுக்க முடியாது.

சரி விஷயத்துக்கு வருவோம் சவூதியில் கொட்டிக் கிடக்கிறதா?
30, 35 வருஷமாக சவூதியில் இருந்து சம்பாதித்து சந்தோஷமாக இருந்தீங்களா என்று இங்குள்ள முதியோர்களிடம் கேள்வியை வைத்துப் பாருங்கள்? இரண்டு குமரிகளைக் கட்டி கொடுத்தேன்,

பசங்களை 10 வது படிக்க வச்சு பாஸ்போர்ட் எடுத்து வெளிநாட்டுக்கு கூட்டி வந்துட்டேன், வீடு கட்டினேன் என்று கேள்வியைத் திசைத்திருப்பி பதில் சொல்வார்கள். ஆனால் அவர் இழந்த இளமைக்கால வாழ்க்கை, மரங்கள் இல்லாததால் ஆக்ஸிஜன் இல்லாமல் அவர் பெற்றுக் கொண்ட வியாதிகள் இவை பற்றி பேசமாட்டார். தாங்கள் தோற்கவில்லை என்று நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.

இவர்கள் செய்த சாதனைகள் அதாங்க குமர்களை  கட்டிக் கொடுத்தது,பிள்ளைகளை வெளிநாடு கூட்டி வந்தது வீடு கட்டுனது இது போன்ற சாதனைகளை செய்ய 90 மேல் வந்தவர்கள் முழி பிதுங்கி நாக்கு தள்ள சம்பாரித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

இவர்கள் சாதிக்க தாமதமாவதற்கு காரணம் அனைவரும் அறிந்ததே விலைவாசி உயர்வு. 70 80களில் வந்தவர்கள் சம்பளமும் 800 அல்லது 1000 ரியால் 90 களில் கடைநிலை வேலைகளுக்கு வந்தவர்களுக்கும் அதே 800 அல்லது 1000 தான்.

80 களில் வந்தவர்களுக்கு நாணய மதிப்பில் 1000(அன்றைய இந்திய நாணய மதிப்பு 15000) ரியால் பிரமாதமான சம்பளம் தான் அவர்களால் எதோ மிச்சம் பிடித்து வீடு கட்ட முடிந்தது. 90 களில் வந்தவர்கள் வரவுக்கும் செலவுக்கும் ஊர் பயணம் போறதுக்கும் சரியாக இருக்கிறது.

இதை விட பாவப்பட்ட பரிதாபத்துக்குரியவர்கள் இன்றும் இருக்கிறார்கள். அவர்களுக்காகத்தான் இந்த பதிவு.

2010 களுக்கு மேல் வளைகுடா நாடுகளுக்கு 500 ரியால் 800 ரியால் சம்பளத்திற்க்காக படிப்பை பாதியில் விட்டு விட்டு வருபவர்கள் இவர்களை நினைத்தால் வேதனையாக இருக்கிறது இன்றைய விலைவாசி என்ன?
ஊரில் விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாறு கடைநிலை வேலை சம்பளம்கூட உயர்கிறது. உதாரணத்திற்கு 2002 ல் நான் ஜவுளிக்கடையில் வேலை பார்த்தபோது 2500 ரூபாய் சம்பளம்.

என் மனைவி அதற்குள் செலவழித்து 300 ரூபாய் மிச்சம் பிடிப்பார். இப்போது அதே ஜவுளிக்கடை வேலைக்கு 8500 ரூபாய் சம்பளம் ஊரிலேயே கிடைக்கிறது. அந்த 8500 ரூபாய் இப்போது குடும்ப செலவுக்கு சரியாக இருக்கும் என்பது வேறு விஷயம்.

ஆனால் ஊரில் விலைவாசி கூடி விட்டது என்பதற்காக வளைகுடா நாடுகளில் சம்பளத்தை கூட்ட மாட்டார்கள் .இங்கே அதே 500 அல்லது 800 ரியால் சம்பளம்தான் 500,800 (இந்திய மதிப்பிற்கு 6000,அல்லது 9600) சம்பளத்திற்கு புதிதாக நிறைய பேர் இங்கு வேலைக்கு வருகிறார்கள். வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போது சொல்லுங்கள் சவூதியில் கொட்டிக் கிடக்கிறதா?
சவூதியில் என்னைச் சுற்றியிருக்கிற நண்பர்கள் ஒரு சிலரின் சம்பள விவரங்களும் அவர்களுடைய வேலைகளும்.

 


இவர் பங்களாதேஷ் தொழிலாளி 500 ரியால் சம்பளம். வேலை இந்த மாடியின் எட்டு தளங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். சவூதி மணல் காற்றின் தூசியைப் பற்றி இங்கு வேலை செய்பவர்களுக்கு தெரியும்.


 


இவர் கேரளாவைச் சேர்ந்த தொழிலாளி ஃபாஸ்ட்ஃபுட் சான்ட்வீச் கடையில் வேலை. சவூதி வெயிலில் அதுவும் நெருப்புக்குள் வேலை. சம்பளம் 800


 


இவர் கேரளாவை சேர்ந்த தொழிலாளி அடுப்பு சூட்டில் வேலை.சரியான கூட்டம் வருகின்ற கடை பம்பரமாக சுழல்வார்கள்.சம்பளம் 1200 ரியால்


 



இவர்கள் தழிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளிகள். மண்டைய பிளக்கிற அரபு நாட்டு வெயிலில் ரோடு போடும் வேலை.

சம்பளம் 1000 ரியால். ஒரு நாள் இந்த வெயிலில் இவர்கள் தார் போடும்போது அருகில் நின்று பாருங்கள் அலுவலகத்தில் ஏசி காற்று காரணமாக வியர்வை வராமல் வியாதி வர வாய்ப்பு இருப்பவர்கள் மொத்த வியர்வைகளையும் வெளியாகி ஆரோக்கியம் பெற வாய்ப்பு கிடைக்கும்.
இறுதியாக

இப்போதும் 10th, 12th படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, இதுபோன்ற கடைநிலை வேலைகளுக்கு தயவுசெய்து வராதீர்கள். உங்களையும் நீங்கள் சார்ந்திருக்கிற சமூகத்தையும் அழிவிற்கு இழுத்து செல்கிறீர்கள். அப்படி வருவதாக இருந்தால் சரியான முறையில் படித்து அதற்கேற்ற வேலைக்கு வாருங்கள். இப்படி வருபவர்கள் குடும்பத்தையும் அழைத்து வரலாம். கடைநிலை வேலை செய்யும் லேபர்களுக்கு குடும்பத்தை அழைத்துவர விசா அனுமதி கிடையாது என்பதை மனதில் இருத்திக் கொள்ளுங்கள்.

Wednesday, April 11, 2012

சென்னையில் இன்று மதியம் 2.14 மணிக்கு நிலநடுக்கம்: 5 மணிக்கு சுனாமி வரலாம் என எச்சரிக்கை


சென்னை, ஏப். 11 -
 
சென்னையில் இன்று மதியம் 2.14 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் சென்னையிலுள்ள சேத்துப்பட்டு, எழும்பூர், நுங்கம்பாக்கம், மைலாப்பூர், மந்தைவெளி, ஆழ்வார்பேட்டை ஆகிய பகுதிகளில் உணரப்பட்டது.
 
இந்த நிலநடுக்கம் மிதமான அளவில் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந் நிலநடுக்கம் 20 வினாடிகள் நீடித்தது. நிலநடுக்கத்தை உணர்ந்த சென்னை வாசிகள் உடனடியாக தங்களது வீடுகளை விட்டு சாலைகளில் குவிந்தனர்.
 
தலைமைச்செயலகம்,  உயர்நீதிமன்றம்  உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்களில் இருந்தோர்  அனைவரும் உடனடியாக சாலையில் கூடினர். நிலநடுக்கம் ஏற்பட்டதால் சென்னை பகுதியில் உள்ள மொபைல் நெட்வொர்க்குகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன.
 
இந்நிலையில் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதையடுத்து  இந்தோனேஷியா, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
 
குறிப்பாக, சென்னையில் இன்று மாலை 5 மணிக்கு சுனாமி வரலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளன
Blogger Wordpress Gadgets